தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Friday, October 1, 2010

அகில இந்திய அரசுஊழியர் சம்மேளனத்தின் பொன் விழா

போராடும் அமைப்பிற்கு பொன்விழா
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் 2-10-10

மாநில அரசு ஊழியர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் 1960-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் ஜனவரி 23, 24-ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திர மாநில என்.ஜி.ஓ. யூனியனின் பெருமைமிகு தலைவர் ஸ்ரீ இராமுலுவின் சீரிய முயற்சியால் துவக்கப்பட்டது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது 28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அரசு ஊழியர் அமைப்புகள் இணைந்துள்ளன. சுமார் 80 லட்சம் மாநில அரசு ஊழியர்களை பிரதிபலிக்கக்கூடிய அமைப்பாக சம்மேனம் விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தில் பல்வேறு மாநில இணைப்பு அமைப்புகளின் பங்கேற்பு இதனை உறுதி செய்துள்ளது.

சம்மேளனத்தின் சாதனை

கடந்த 50 ஆண்டுகாலமாக, சம்மேளனத் தின் இடைவிடாத செயல்பாட்டின் காரண மாக பெரும்பான்மையான மாநிலங்களில் இன்று மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தர முடிந்துள்ளது. 1980க்குப் பிறகு மத்திய அரசில் புதிய பொருளாதாரக் கொள் கைகள் அமல்படுத்த தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடைபெற்றுள்ள 14 அகில இந்திய வேலை நிறுத்தங்களில், சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று லட்சக் கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்று முத்திரை பதித்துள்ளனர். சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று 10.02.1988 அன்று நடைபெற்ற அகில இந்திய சூவலை நிறுத்தமே, தமிழகத்தில் 1988ல் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் (ஜாக்டீ) போராட்டத் திற்கு வித்திட்டது. இந்த போராட்டமே தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசால் 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சட்டமாக்கிட முயலும் புதிய பென்சன் திட்டத்தை இதுவரை தடுத்து நிறுத்திட முடிந்துள்ளது என்றால், அதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பங்கு மகத்தானது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்பு, எல்.ஐ.சி., வங்கி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்தும், வேலை நிறுத்த உரி மையை அடிப்படை உரிமையாக்கிட வலியுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் குறிப்பிடும்படியான பாத்திரத்தை சம்மேளனம் வகித்து வருகிறது. வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக் கத்தில் ஏனைய வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து நமது சம்மேளனம் பணியாற்றியுள்ளது.

போராட்டக் களத்தில் ஆதரவு

தமிழ்நாட்டில் 2003ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாத்திட நாடு முழுவதும் நிதி திரட்டி தமிழக அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் போராட்டத்தை பாதுகாத்தது அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம். இன்றும் காஷ்மீர் மற்றும் பீகாரில் போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்து, நாடு முழு வதும் அவர்களுக்கு ஆதரவினை திரட்டி வருகிறது சம்மேளனம்.

இந்த காலகட்டத்தில் அகில இந்திய சம்மேளனம், பெண்களை அணிதிரட்டி, அவர்களை பயிற்றுவித்து தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்தவும் தவறவில்லை. சம்மேளனத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மாநில அமைப் பும் அம்மாநிலத்தில் பெண்களுக்கென்று ஒரு துணை அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என முடிவெடுத்து, அந்த துணை அமைப்பின் பொறுப்பாளர்களை தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தில் பெண்களுக்கான அமைப்பு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கின்றனர். இதன் மூலம் பெண்களை தேசிய தலைவர்களாக அடையாளம் காட்ட முடிந் துள்ளது.

தமிழகத்தின் பங்கு

தோழர் எம்.ஆர்.அப்பன் சம்மேளனம் உருவான 1960-ம் ஆண்டிலிருந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு வந்தார். அரசு அலுவலர் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தோடு இணைந்து செயலாற்றிட வலியுறுத்தி வந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சம்மேளனக் கூட்டங்களில் எம்.ஆர்.அப்பன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கைக் குழு உருவாகி செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிக்கக் கூடிய போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத் தப்பட்டன.

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் தொடங்கப்பட்ட பின்னர் (1984) மும்பையில் 1985ல் நடைபெற்ற சம்மேளனத்தின் 6-வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் அகில இந்தியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம் மேளனத்தின் 7வது தேசிய மாநாடு 1990, மே மாதம் 12 முதல் 15 தேதிகளில் கோவையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்து (1984) குறுகிய காலத்தில் அகில இந்திய மாநாட்டை நடத்திட முன்வந்தது, அனைத்து மாநில பிரதிநிதிகளின் பாராட்டை பெறத்தக்கதாக அமைந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற 9வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் சம்மேளனத்தின் கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த கே.கங்காதரன் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக சம்மேளனத்தின் 11-வது தேசிய மாநாடு 2002 டிசம்பர் மாதம் 27 முதல் 30 வரை சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கத்தாவில் 2005-ம் ஆண்டு நடை பெற்ற சம்மேளனத்தின் 12-வது தேசிய மாநாட்டில் அரசுஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் துணைப் பொதுச் செயலாளராகவும், இன்றைய மாநிலத் தலைவராக உள்ள இரா.தமிழ்செல்வி, அகில இந்திய துணைத் தலைவராக வும் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 13-வது தேசிய மாநாட்டில் ஆர்.ஜி.கார்னிக் அகில இந்திய தலைவராகவும், சுகுமால்சென் மூத்த துணைத்தலைவராகவும், அஜய் முகோபாத்யாயா கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன் றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சம்மேளனத்தின் அகில இந்திய பொருளாளராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் தலைமையிடத்து செயலாளராகவும், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.பீட்டர் பர்னபாஸ் மற்றும் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாகவும் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சி.பி.மல்லிகா பத்மினி தேசிய செயற்குழுவில் தமிழகத்தின் சார்பில் மகளிர் பிரதிநிதியாக பங்கேற்று வருகின்றார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5,6,7 தேதிகளில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. விழாவில் நாடு முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். முதல் நாள் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெறுகின்ற நேரத்தில் தமிழகம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடமாக மாறியிருப்பதின் மூலம் அகில இந்திய சம்மேளனத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னோடிகள் கடந்த காலங்களில் ஆற்றிய உழைப்பு அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment